
தாலுகா அலுவலகத்தில் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது... 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை... என்று அந்த நபர்களின் புகைப்படத்தோடு நாளிதழ்களில் செய்திகள் வெளிவருவதை வாசித்திருப்பீர்கள். ஆயிரத்திற்கும் ஐநூறுக்கும் உடனே பாய்ந்து சென்று அடக்கும் சட்டம், கோடிக்கணக்கில் மக்களின் பணத்தைக் கையாடல் செய்பவர்களைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறது. ஒரே வீட்டில் ஒரே நேரத்தில் இருவர் திருடி மாட்டிக்கொண்டால், கொஞ்சம் திருடியவனை பெரிய திருடன் என்றும் நிறைய திருடியவனை நிரபராதி என்றும் சட்டம் சொன்னால் அது எப்படி நியாயமாகும்? ஆனால் சட்டம் பலவேளைகளில் அப்படித்தான் நியாயப்படுத்திக்கொண்டிருக்கிறது.

பணபலம், அரசியல் பலம், ஆள்பலம், சாதிபலம் உள்ளவர்கள் தவறு செய்யும் போது சட்டம் தனது வாலை சுருட்டிக் கொள்கிறது. அப்பாவி மக்கள் சிறிய தவறு செய்தால் கூட முட்டிக்கு முட்டித் தட்டுகிறது. அதிகாரம் மற்றும் பணம் படைத்தவர்களைப் பொறுத்தமட்டில் சட்டம் ஒரு செல்ல நாய் மாதிரி. அவர்கள் போடுவதை சாப்பிட்டுவிட்டு செல்லமாய் வாலாட்டிக் கொண்டு தூங்கிப்போய்விடுகிறது.

மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா அவர்கள் 1,76,000 கோடி ஊழல் செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆ...ஐயோ...ராசா... இவ்வளவு பெரிய ஊழலா என்று மக்கள் பதறிப்போன நேரம் ஆ.ராசா வழக்கம்போல பளபளப்பான வெள்ளை வேட்டிச் சட்டையோடு கம்பீரமாக சுற்றித்திரிந்தார். நமது சட்டங்களெல்லாம் கைகட்டி நின்று இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்தன. அவர் குற்றவாளிதான் என்று சொல்ல அச்சப்பட்டன. காரணம் என்னவென்றால், ஆட்சியும், பணபலமும், ஆள்பலமும் ஆ.ராசாவுக்கு அதிகமாகவே இருந்தன.

திருடனாக இருந்தாலும் பெரிய திருடனாக இரு. சட்டம் உனக்குப் பாதுகாப்புக் கொடுக்கும். பணம் இருந்தால் எவரை வேண்டுமானாலும் கொலை செய். சட்டம் உன்னை நிரபராதி என தீர்ப்பளிக்கும். பதவி இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய். சட்டம் உனக்கு உதவி செய்யும். பதவி இல்லையா? பணம் இல்லையா? ஆள்பலம் இல்லையா? எதற்கும் கவனமாயிரு. நீ செய்யாத குற்றத்திற்கும் சட்டம் உன்னை சிறைவைக்கலாம்.
காசு உள்ளவன் குற்றம் செய்யலாம். ஏனென்றால் அவன் சட்டத்தின் செல்லப்பிள்ளை...செல்வப்பிள்ளை. ஆனால், காசில்லாதவரை சட்டம் தனது காலில் போட்டு மிதித்;துவிடும். இந்தச் சூழலில், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் வெறும் வேடிக்கைப் பேச்சு. ஆம். நீதி தேவதையின் தராசுகள் என்றோ துருப்பிடித்துப் போச்சு.

நீங்க என்ன நினைக்கிறீங்க
சட்டம் உங்களை பாதுகாக்கும் என நம்புகிறீர்களா? ஏன்?
சட்டம் தனது கடமையை செய்யத் தவறினால் நாம் என்ன செய்யலாம்?
யாருக்கு சாதகமாக நமது சட்டங்கள் செயல்படுகின்றன?
No comments:
Post a Comment