Sunday, August 7, 2011

அனுபவங்கள் நம்மை மாற்றட்டும் (Experience is the Best Teacher)

                  ஒவ்வொரு நாளும் பல்வேறு நபர்களை நாம் சந்திக்கிறோம். பல நிகழ்வுகளைப் பார்க்கிறோம்.  மனதை வருடுகின்ற மற்றும் மனதை நெருடுகின்ற பல எதார்த்தங்களை நாளும் அனுபவிக்கின்றோம். இத்தகைய அனுபவங்களை கவனமாய் உள்வாங்கி, ஆய்வு செய்து, தங்களது வாழ்விலும் பிறரது வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியவர்களே மகான்களாக போற்றப்படுகிறார்கள்.
                      சித்தார்த்தன் என்பவர் நோயினால் அவதியுறும் மனிதரைப் பார்த்தார், முதிர்ந்த வயதினால் தள்ளாடுபவரைக் கண்டார், இறுதிச்சடங்கிற்காக ஊர்வலமாகக் கொண்டுச்செல்லப்படும் பிணத்தைப் பார்த்தார். மனதிற்குள் எண்ணங்கள் அலைமோதுவதை உணர்ந்தார். மரத்தடியில் அமர்ந்து அனுபவங்களை ஆய்வு செய்தார். ஞானம் பெற்று புத்தராக உருவெடுத்தார். அனுபவங்கள் அவரை மாற்றின.
                                  
         ஆக்னஸ் என்ற ஓர் வெளிநாட்டுப் பெண் கொல்கத்தாவில் ஆசிரியராக பணிபுரிந்தார். அதே சமயம் கொல்கொத்தாவின் சேரிப்புறங்களிலும் சாலையோரங்களிலும் மக்கள் பசியிலும் நோயிலும் முதுமையிலும் வாடுவதைக் கண்டார். தனது ஆசிரியப் பணியை விட்டுவிட்டு சேரிகளை நோக்கி புறப்பட்டார். சாலையோரம் கவனிப்பாரற்றுக் கிடந்த மனிதர்களை அன்போடு அரவணைத்து ஆதரவு அளித்தார். அநாதைகளாகக் கைவிடப்பட்டக் குழந்தைகளை தாய்போல பேணி வளர்த்தார்;. அன்னைத் தெரசாவாக புகழ்பெற்றார். அனுபவங்கள் அவரை மாற்றின.
                               உளுந்தூர்பேட்டையின் ஓர் குறிப்பிட்ட சாலையில் காலையிலும் மாலையிலும் பரபரப்பு. வாகனங்கள் ஜெட் வேகத்தில் பறந்து கொண்டிருக்கின்றன. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பயத்தோடு சாலையைக் கடக்கின்றனர். வேலைக்குச் செல்வோர் அங்குமிங்குமாக சென்று கொண்டிருக்கின்றனர். பெரிய விபத்து ஒன்று நடக்கிறது. இதையெல்லாம் நேரில் பார்க்கிறார் அப்பகுதியை சார்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர். அவருடைய மனிதில் ஓர் சலனத்தை உணர்ந்தார். ஏதாவது செய்யலாமே என்று யோசிக்கலானார். அன்றிலிருந்து சுமார் 15 ஆண்டுகளாக காலை 8.00 மணி முதல் 9.30 மணிவரை மற்றும் மாலை 3.30 மணி முதல் 5.00 மணிவரை பள்ளி செல்லும் மாணவர்களையும் மற்றவர்களையும் சாலையில் ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறார். அனுபவம் அவரை மாற்றியது.
              இவ்வாறு எத்தனையோபேரை சொல்லிக் கொண்டே போகலாம். தங்களுடைய வாழ்வில் பெற்ற அனுபவங்களால் தூண்டப்பட்டவர்கள் இவர்கள். ஏன்? ஏதற்கு? யார்? என்ற கேள்விகளைக் கேட்டு தங்கள் அனுபவத்திலிருந்து புதிய மனிதர்களாக உருவெடுத்தவர்கள் இவர்கள்.  ஏற்றத்தாழ்வுகள், வன்முறைகள், ஏமாற்று வேலைகள். விபத்துகள் என எத்தனையோ அனுபவங்களை நாம் பெறுகிறோம். மாற்றங்கள் எங்கே?
நீங்க என்ன நினைக்கிறீங்க?

 உங்கள் வாழ்வை மாற்றிய அனுபவம் ஏதேனும் உண்டா?
 அனுபவங்களால் நாம் மாறுவதில்லையே ஏன்?
 அனுபவங்களால் மாற்றம் காண நாம் என்னென்ன செய்யலாம்?

No comments:

Post a Comment