Wednesday, August 10, 2011

நேர்மறையே நேரிய மறை (A Positive approach Changes Everything)

                   புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இரு நபர்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். ஒருவர் தனக்கு இப்படி ஒரு நோய் வந்துவிட்டதே என்று தன்னையும் குடும்பத்தையும் கடவுளையும் நினைத்து, புலம்பிக் கொண்டும் சபித்துக் கொண்டும் நோய் கண்டறியப்பட்ட சில நாட்களிலேயே இறக்க நேரிடுகிறது. இன்னொருவர் அந்த நோயை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொள்ளத் தொடங்கி தன்னம்பிக்கையோடும் கடவுள் நம்பிக்கையோடும் மருத்துவர் குறிப்பிட்ட நாட்களை விட அதிக நாட்கள் வாழ்ந்து விடுகிறார். சிலர் அந்த நோயிலிருந்து பூரண சுகமும் பெற்றுவிடுவதை நாம் பார்க்க முடிகிறது. புற்றுநோயைக் கூட ஒருவருடைய நேர்மறை சிந்தனைகளால் வெற்றிக் கொள்ள முடியும் என்பது பலருடைய வாழ்வில் உணரப்பட்ட உண்மை.

                  நம்மில் சிலருடைய எண்ணம், ஏக்கம், கனவு, வார்த்தை, செயல் அத்தனையும் பெரும்பாலான நேரங்களில் எதிர்மறையாகவே அமைந்து விடுகிறது. வாயைத் திறந்தாலே எரிதழல் போல எதிர்மறைச் சிந்தனைகளை கொப்பளித்து விடுகிறோம். எதிர்மறை யூகங்களை வளர்த்துக் கொண்டு கண்டபடி பேசி காயப்படுத்தி விடுகிறோம். எதிர்மறைச் சிந்தனைகள் நம்மில் அலைமோதுகின்றபோது கவனச் சிதறலும் பதற்றமும் நம்மை சிறைப்பிடித்து விடுகின்றன.

                 எதிர்மறையாக சிந்தித்து செயல்படும்போது வாழ்வில் சில முக்கியமான காரியங்களை நாம் இழக்க நேரிடுகிறது. முதலாவதாக, நமது எதிர்மறைச் சிந்தனைகளால் உடல் நலனை நாம் இழக்கிறோம். பல்வேறு உடல் மன நோய்களுக்கும் காரணம் என்ன தெரியுமா? நமது எதிர்மறையான எண்ணங்கள்தான். நம்மை சபித்து, பிறரை சலித்து, உடலில் எதிர்மறை உஷ்ணம் ஏற்றி, சுவாசத்தில் வேகத்தை ஊற்றி நமது உடல் நலனை நாமே பல நேரங்களில் கெடுத்துக் கொள்கிறோம்.

              அடுத்ததாக, நாம் இழக்கின்ற பெரும் சொத்து நமது நட்பு. எதிர்மறையாகவே சிந்தித்து செயல்படும் எவருக்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பது கடினம். நேர்மறை அணுகுமுறைகளே நல்ல நண்பர்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும். நேர்மறையாகப் பார்ப்பவர்களிடமே நட்பு அதிகமாக பூக்கிறது. பரவாயில்லை... அதனாலென்ன... நமக்குள்தானே... சரிசெய்து கொள்ளலாம்... என்று நடந்த தவறையும் கடந்து யோசிப்பவர்களே இதயங்களை வெற்றிக் கொள்கிறார்கள். அது சரியில்லை... எனக்கு மட்டும் ஏன் இப்படி... நீ திட்டமிட்டே அப்படி செய்தாய்... உன்னைப் போய் நம்பினேனே... என்று சிறிய சிறிய காரியங்களிலும் எதிர்மறை விமர்சனங்களை அள்ளி வீசுபர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளி நிற்கவே நாம் விரும்புகிறோம்.

நீங்க என்ன நினைக்கிறீங்க

 நேர்மறையாக சிந்திப்பதால் நாம் இழப்பது என்ன?
 நேர்மறையாக செயல்பட்டு சாதித்த சில மனிதர்களைப் பற்றி சொல்ல முடியுமா?
 எதிர்மறையாக சிந்தித்து செயல்பட்ட கசப்பான அனுபவங்கள் உண்டா?

2 comments:

  1. Positive anything is better than negative nothing...............

    ReplyDelete
  2. Pessimists see the worst in everyone, and in every situation.

    If someone is expecting the worst from a person, then he/she can't ever be disappointed. Only the disappointed resort to violence.....

    ReplyDelete