
நோயாளிகள் நாடிச் செல்லும் ஓர் சரணாலயம் திருச்சி பாத்திமா நகர் திருக்குடும்பம் மருத்துவமனை. தொழுநோயாளிகள், காசநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள் என பலரும் தஞ்சமடையும் ஒர் தாயின் மடி அது. இங்கு அடைக்கலம் தேடும் பல நோயாளிகள் அவர்களது குடும்பத்தாலும் உறவினர்களாலும் ஊராலும் புறக்கணிக்கப்பட்டவர்கள். சீ என்று மூக்கையும் வாயையும் பொத்திக்கொண்டு ஒதுங்கிச்செல்லும் மனிதர்களால் அவமானப்படுத்தப்பட்டவர்கள். சமூகம் தனது நாவினால் சுட்ட வடுக்கள் ஆறாமல் அழுதுகொண்டிருப்பவர்கள். இத்தகைய நோயாளிகளின் அழுகிப்போன புண்களை பரிவோடுக் கழுவித் துடைக்கிறார்கள் அங்குள்ள செவிலியர்கள். இதயத்தில் உறைந்த பயத்தையும், வெறுப்பையும், அவமானத்தையும், கோபத்தையும், வேதனையையும் போக்கி ஆறுதல் தருகிறார்கள். நோயாளிகளின் குழந்தைகளை தாயன்போடு அரவணைத்துப் பேணுகிறார்கள். இங்கு பொங்கி வழிந்தோடும் மனிதநேயம் மனதை கொள்ளை கொள்கிறது.
நோயுற்றிருக்கும் கணவருக்காக மருத்துவமனையில் கண்விழித்துக் காத்துக் கிடக்கும் நல்ல மனைவியரைப் பார்த்திருப்போம். படுத்தப்படுக்கையில் கிடக்கும் பெற்றோரை பரிவோடு பேணும் நல்ல பிள்ளைகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். நோய்வாய்ப்பட்டக் குழந்தையை மருத்துவமனைக்கு பதற்றத்தோடு தூக்கிக்கொண்டு ஓடும் பெற்றோரைக் கண்டிருப்போம். இவையெல்லாம் அன்பின் ஆழமான வெளிப்பாடுகள்.

இன்னொரு மனிதரை கனிவோடு பராமரிப்பது என்பது போற்றப்படவேண்டய ஓர் செயலாகும். அதிலும் குறிப்பாக, ஒருவர் நோய்வாய்பட்டிருக்கும்போது அவரை பரிவன்போடு பேணுவது வாழ்த்தப்படவேண்டியதாகும். நோயுற்றிருக்கும் வேளையில் இயல்பாகவே அடுத்தவரின் அன்பையும் அரவணைப்பையும் நாம் நாடுகிறோம். நமக்குத் தெரிந்த நபர் மருத்தவமனையில் இருக்கும்போது பழவகைகள், சத்துமாவுகள் என விதவிதமாய் வாங்கிக்கொண்டு அவரைப் பார்த்து நலம் விசாரிக்கிறோம். 'நல்ல நண்பனை ஆபத்தில் அறி' என்பதுபோல உண்மையான உறவை நாம் நோயுற்றிருக்கும்போது அறிந்து கொள்ளலாம்.
நோய்வாய்ப்பட்டிருக்கும் பெற்றொர்களையும் பெரியோர்களையும் சில வீடுகளில் ஏதோ ஒரு மூலையில் ஓரங்கட்டியிருப்பார்கள். மாட்டுக் கொட்டகையில் கிடத்தியிருப்பதையும் பார்க்கலாம். நோயுற்றதால் அந்தப் பெரியவர்கள் ஆடுமாடுகளைவிடக் கேவலமாகிவிட்டார்கள். சனியன் இருமிக்கிட்டே இருக்கு... வீடெல்லாம் நாறித் தொலையுது... இதால வீட்டுக்கு விருந்தாளிகளை அழைக்க முடியல... சீக்கிரம் செத்து தொலையமாட்டேங்குது என்று சிலர் திட்டித் தீர்ப்பதுண்டு. அந்த வேளைகளில் நோயுற்றிருப்பவர்களின் உள்ளம் வேதனையில் துடிதுடித்துப்போகும்.

நீங்க என்ன நினைக்கிறீங்க?
நீங்கள் நோயுற்றிருக்கும்போது உங்களிடம் இருந்த எதிர்பார்ப்புகள் என்னென்ன?
நோய் என்பது கடவுளின் சாபமா? நம் பாவத்தின் விளைவா?
நோயாளிகளுக்கு என்னென்ன வழிகளில் துணைநிற்கலாம்?
Great service.....
ReplyDelete