Wednesday, November 10, 2010

இழப்புகளை தாண்டி வா

               வாழ்வினில் ஏமாற்றப்படும்போதோ, இழப்புகளை சந்திக்கின்றபோதோ நம்மில் பலர் மனம் தளர்ந்து விடுகிறோம். இனி வாழ்வதில் பயனில்லை என்று நிலைகுலைந்து விடுகிறோம். உதாரணமாக, மாணவர்கiளை கருத்தில் எடுத்துக் கொள்வோம். தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தாலோ அல்லது தோல்வியடைந்திருந்தாலோ சில மாணவர்கள் விபரீதமான முடிவுகளை எடுப்பதை நாம் அறிவோம். ஓவ்வொரு ஆண்டும் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அவலத்தை நாம் செய்தித்தாள்களில் வாசிக்க முடிகிறது.
                 
அறிவியல் உலகம் இன்றளவும் வியந்து போற்றும் மாமேதைகளில் ஒருவர் தாமஸ் ஆல்வா எடிசன். அவரது ஆசிரியர் 'இவன் சரியான மரமண்டை.. எதையுமே புரிந்துகொள்ளாத உதவாக்கரை' என்ற சொல்லி பள்ளிக்கூடத்தை விட்டே  துரத்தியடித்தார். ஆனால், இதனைக்கண்டு மனமுடைந்து போகாத எடிசன் தனது கடின உழைப்பாலும் முயற்சியாலும் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகையே வியக்க வைத்தார். எடிசனால் அவமானத்தைத் தாண்டி சாதிக்க முடிந்தது.

கிரிக்கெட் உலகமே வியந்து கொண்டாடுகின்ற சச்சின் தெண்டுல்கர் பத்தாம் வகுப்புத் தேல்வில் தோல்வியடைந்தவர். இன்று கிரிக்கெட் விளையாட்டில் அவர் முறியடிக்காத சாதனைகளே இல்லை என்றாகிவிட்டது. ஆம். அவரால் தோல்வியைத்தாண்டி வாழ்வில் சாதிக்க முடிந்தது. இவர்களைப் போன்று எத்தனையோ மனிதர்கள் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட அவமானங்களையும் இழப்புகளையும் தோல்விகளையும் தாண்டி சாதித்திருக்கிறார்கள்.
             மதுரை அழகர்கோவில் பகுதியைச் சார்ந்த அமுதலட்சுமி என்பவர் குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற முதியவர்கள் காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறார். பல்வேறு பிரச்சனைகளோடு தன்னிடம் தஞ்சமடையும் பெண்களை ஆறுதலோடு தேற்றி நல்வழிப்படுத்துகிறார். ஆனால். இவர் தனது சொந்த வாழ்விலே பல்வேறு வேதனைகளை அனுபவித்தவர். தனது கணவரால் அநியாயமாக ஏமாற்றப்பட்டவர். எதெற்கெடுத்தாலும் சந்தேகப்படும் கணவரால் வஞ்சிக்கப்பட்டவர்.  'ஐயோ எனக்கு மட்டும் இப்படி நடந்து விட்டதே' என்று மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கவில்லை. மாறாக, துணிவு கொண்டிருந்தார். ஆழமான தன்னம்பிக்கைக் கொண்டிருந்தார். தன்னைப்போல் சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவைசெய்ய முடிவுசெய்தார். இன்று அளப்பரிய பணிகளை செய்து கொண்டிருக்கிறார். (நன்றி: தினமணி, ஆகஸ்டு 15, 2010).
நீங்க என்ன நினைக்கிறீங்க?

 உங்கள் வாழ்வில் அவமானங்களும் தோல்விகளும் நிகழ்ந்ததுண்டா? என்ன செய்தீர்கள்?
 மதிப்பெண் குறைவாலும், தோல்வியுறுவதாலும் தற்கொலை முடிவுக்கு வரும் மாணவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
 தோல்விகளே இல்லாத வாழ்வு என்பது சாத்தியமா?
 எந்த மாதிரியான பிரச்சனைகளை நிங்கள் சந்தித்துக் கெண்டிருக்கிறீர்கள்?

No comments:

Post a Comment