Saturday, November 13, 2010

உணவுப் பழக்கம் – கொல்லவும் செய்யும் (Food Habits)

        
காலச்சூழலுக்கு ஏற்ப நமது உணவுப் பழக்கவழக்கமும் மாறிக்கொண்டே வருகிறது. மேலை நாடுகளின் உணவுப் பழக்கவழக்கத்தை நாம் அப்படியே உள்வாங்கிக் கொண்டிருக்கிறோம். நாகரீகம், பேஷன். பாஸ்ட் புட் என்ற பெயரில் எதையெதையோ சாப்பிட்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம். ஐஸ் கிரீம், பப்ஸ், நூடுல்ஸ், கட்லட், மாகி என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விரும்பிச் சாப்பிடுவதால் ஒரு நோயாளிச் சமூகம் ஏற்கெனவே உருவாகிவிட்டது.
        
குழந்தைகள் தங்கள் வயதுக்கு மிஞ்சிய உடல்பருமனைப் பெற்று தங்களது சகநண்பர்களின் கேலிப்பேச்சுகளுக்கு உள்ளாகின்றனர். ஓயாமல் நொறுக்குத் தீனிகளைத் தின்று பலவிதமான உடல்நோய்களுக்கு ஆளாகின்றனர். இயற்கையான இளநீர், கஞ்சித் தண்ணீர், சுக்கு நீர் இவற்றை ஓரங்கட்டிவிட்டு டீ, காப்பி, செவன் அப், கொக்ககோலா, மிராண்டா, பீர் என்று செயற்கைக்கு மாறிவிட்டோம். இவை கொஞ்சம் கொஞ்சமாக நமது சிறுநீரகத்தையும், கல்லீரலையும், சிறுகுடலையும் பெருங்குடலையும், கணையத்தையும் செல்லரிக்க செய்துவிடுகின்றன. யாராவது ஆசிட்டை காசுகொடுத்து வாங்கி நம்மீது ஊற்றிக்கொள்வோமா? நம் உடல் வெந்துப் புண்ணாகி வேதனையில் துடிதுடித்து இறப்பதை நாம் விரும்புவோமா? ஆனால், தெரிந்தோ தெரியாமலோ அத்தகைய ஓர் செயலைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
      
கண்மூடித்தனமாக சாப்பிட்டுவிட்டு மிஞ்சும் கொஞ்ச காசையும் மருத்துவர்களிடம் கொண்டுக் கொட்ட வேண்டியிருக்கிறது. நடுத்தர மற்றும் வசதியான குடும்பத்தினர் ஒரு புதிய பழக்கத்தை ஆரம்பித்திருக்கின்றனர். வீட்டில் சமைக்க விரும்பாமல் ஹோட்டல்களில் சென்று சாப்பிட தொடங்கியுள்ளனர். நகரங்களில் இந்தப் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. வாரஇறுதி நாட்களில் இத்தகைய பழக்கத்தை வளர்த்துக் கொண்டுவரும் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சுவையையும் மணத்தையுமே ஹோட்டல்களில் கருத்தில் கொண்டு சமைக்கின்றனர். அதற்காக, அதிகமான எண்ணெயையும், கொழுப்பு நிறைந்த பொருட்களையும் பயன்படுத்துகின்றனர். இதனால் உடல்நலம் வெகு சீக்கிரத்தில் கெட்டுப்போய்விடுகிறது.
          
அதிகமாக கொழுப்பு நிறைந்த பொருட்களையும், நொறுக்குத் தீனிகளையும் சாப்பிட்டுவிட்டு, உடற்பயிற்சி ஏதும் செய்யாமலிருப்பது உடல்நிலையை மேலும் சிக்கலுக்குள்ளாக்குகிறது. சாப்பிடுவதும், டி.வி பார்ப்பதுமாக பொழுதைக் கழிக்கும் சிறார்கள் வெகு சுலபமாக பல்வேறு நோய்களுக்கும் ஆளாகிவிடுகின்றனர்.
நீங்க என்ன நினைக்கிறீங்க?

 உங்களுக்கு பிடித்த உணவு வகைகள் என்னென்ன?
 எந்த வகையான உணவுகள் நமது உடலுக்கு நல்லது?
 சுவைக்காகவும் மணத்திற்காகவும் உடல்நலத்தை இழப்பது சரியா?
 உடல்நலம் கெடுவதால் என்னென்ன பிரச்சனைகளை நாம் சந்திக்கிறோம்?

No comments:

Post a Comment