

இன்று மக்கள் மத்தியில் தொலைக்காட்சியைப் போல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் வேறு எதுவும் இல்லை எனலாம். வயது வரம்பின்றி எல்லா தரப்பினரையும் அது கவர்ந்துவிட்டது. குறிப்பாக, நமது சிறார்கள் தொலைக்காட்சியே கதியென்று கிடக்கின்றார்கள். விடுமுறை நாட்களில் தொலைக்காட்சியோடுதான் அவர்களது பொழுதெல்லாம் கரைகிறது. அவர்களை குறிவைத்தே புதியபுதிய தொலைக்காட்சி அலைவரிசைகள் நாளுக்குநாள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆளுக்கொரு சினிமா ஹீரோவை பிடித்துக் கொண்டு அந்த ஹீரோவைப் போல பேசுவதும், தலை சீவுவதும், ஆடை அணிவதும், செயல்களைச் செய்வதும், மற்றவர்களோடு அந்த ஹீரோவைப் பற்றி வாக்குவாதம் செய்வதும் சிறார்கள் மத்தியில் அதிகமாகவே காணப்படுகிறது. ஹீரோ என்றால் மற்றவர்களை எப்படியாவது அடித்து வீழ்த்தி, ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற சிந்தனையை தொலைக்காட்சி சிறார்கள் மனதில் வேரூன்ற செய்வதால் அவர்கள் முரட்டுக் குணம் படைத்தவர்களாகவும், தங்களால் முடியாததைக் குறித்து தாழ்வு மனப்பான்மைக் கொண்டவர்களாகவும் காணப்படுகிறார்கள்.

தொலைக்காட்சியால் நமது சிறார்கள் பல்வேறு உறவுச்சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். முன்பெல்லாம் வீட்டிற்கு மாமா, சித்தி, பாட்டி என்று யாராவது வந்துவிட்டால் சிறார்கள் அவர்களை ஓடிச்சென்று அணைத்துக்கொள்வது வழக்கம். இப்போதோ, யார் வந்தாலும் எனக்கென்ன என்று ரீமோட்டைக் கையில் வைத்துக்கொண்டு தொலைக்காட்சியிலேயே கண்களை பதித்துவிடுகிறார்கள். தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போது பெற்றோர்கள் ஏதாவது வேலைச்செய்ய சொல்லிவிட்டால் எளிதில் எரிச்சல் அடைந்து விடுகிறார்கள். தனக்கு விருப்பமான அலைவரிசையை வைக்கவேண்டும் என்று சிறார்கள் தங்களுக்குள்ளே ஓயாமல் சண்டைபோட்டுக் கொள்கிறார்கள்.

தொலைக்காட்சி தரும் ஆச்சரியமும், பயமும், வன்முறையும் நிறைந்த மாயாஜாலக் காட்சிகளை எதார்த்தமாக நினைத்துக் கொண்டு தாங்களும் அதே போல் செய்ய வேண்டும் என்ற தீராத மயக்கத்தில் இன்றைய சிறார்கள் உள்ளனர். இதனால் நடந்தேறும் விபரீதங்கள் கொஞ்சமல்ல. 1999 ம் ஆண்டளவில் இந்தியா முழுவதும் 30 க்கும் மேற்பட்ட சிறார்கள் அன்றைய சாகச வீரனான சக்திமானைப் பின்பற்றி தீக்குளித்தல், உயரத்திலிருந்து குதித்து கை கால்களை முறித்துக் கொள்ளுதல், உயிரை மாய்த்துக் கொள்ளுதல் போன்ற பல்வேறு விபரீதங்களுக்கு ஆளானார்கள். 27.08.2006 அன்று மதுரையை சார்ந்த தியாகேஷ் என்ற சிறுவன் பவர் ரேஞ்சர்ஸ்களை நினைத்துக் கொண்டு தீயோடு விளையாடி உயிரை மாய்த்துக் கொண்டான்.
நீங்க என்ன நினைக்கிறீங்க?
நீங்கள் அதிகநேரம் தொலைக்காட்சி பார்க்கிறீர்களா?
தொலைக்காட்சியால் வரும் நன்மைதீமைகள் என்னென்ன?
தொலைக்காட்சியில் எவற்றை விரும்பிப் பார்க்கிறீர்கள்? ஏன்?
No comments:
Post a Comment