Wednesday, November 10, 2010

கடமையும் உரிமையும் (Responsiblity and Rights)


'நாடு உனக்கு என்ன செய்ததென்று கேட்காதே
நீ நாட்டிற்கு என்ன செய்தாய்?'
- ஜான் கென்னடி
                  ஊதிய உயர்வுகோரி ஆசிரியர்கள் போராட்டம்... சாலை வசதி செய்து தரமாறு கிராமத்தினர் ஆர்ப்பாட்டம்... இலவச டி.வி. வழங்கப்படாத ஆத்திரத்தில் மக்கள் சாலை மறியல்... வக்கீலை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு வக்கீல்கள் உண்ணாவிரதப் போராட்டம்... ஓவ்வொருநாள் செய்தித்தாளிலும் இதுபோன்ற செய்திகளை நாம் காண்கிறோம். தங்களது உரிமைகளைக் கேட்டு ஏதாவது ஒரு போராட்டம் இந்த நிமிடமும் உலகின் ஏதாவது ஒரு மூலையில் நடந்துகொண்டிருக்கலாம்.
        உரிமைகளைக் கேட்டுப் பெறத்துடிக்கும் நம்மில் பலர் நமது கடமைகளைப் பற்றிய பேச்சை அறவே மறந்து விடுகிறோம். எதையெல்லாம் பெற்றோர்களிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் பெற்றுவிடவேண்டுமோ அதையெல்லாம் ஒன்றுவிடாமல் பெற்றுக்கொள்ளத் துடிக்கும் நாம், நமது கடமைகளை குழிதோண்டிப் புதைத்துவிடுகிறாம். ஊதிய உயர்வுக்கோரிப் போராடும் ஆசிரியர்களில் எத்தனைபேர் தான் பொறுப்புள்ள ஓர் ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்ற கடமையை உணர்;ந்து செயல்படுகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். அரசிடமிருந்து இலவசங்களை வாங்கிக் குவிக்க நினைக்கும் நாம் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக ஏதாவது செய்துள்ளோமா என்ற கேள்வியை பலநேரங்களில் கேட்பதில்லை.
        
நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றி பேசும்போது அதிலுள்ள அடிப்படை உரிமைகள் பற்றி மட்டும் பேசுகிறோம். அதே அரசியலமைப்புச் சட்டத்தில்தான் ஒவ்வொரு இந்தியக்    குடிமகனு(ளு)ம் ஆற்ற வேண்டிய கடமைகளும் எழுதப்பட்டுள்ளன. அதைப்பற்றி நம்மில்  அதிகமானோர் பெரிதாகப் பேசுவதே இல்லை. சாதி, சமய, மொழி பேதங்களைக் கடந்து சகோதரத்துவத்தையும் ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க வேண்டும், வன்முறைகளை தவிர்க்க வேண்டும், சுற்றுப்புறச் சூழலை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும், பொதுச்சொத்துக்களை பேணிப் பாதுகாக்க வேண்டு;ம் என நமது அரசியலமைப்புச் சட்டம் நம்மிடம் எதிர்பார்க்கும் கடமைகளை எத்தனை பேர் பெரிதாக எண்ணி செயல்படுத்துகிறோம்?
             கடமைகளைச் செய்ய மனமில்லாத எவருக்கும் சலுகைகளும் உரிமைகளையும் பெறுவதற்கான தகுதியில்லை. கடமையும் உரிமையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். கடமையை ஆற்ற மனமில்லாதவர்களுக்கு உரிமை மறுக்கப்படுவது நியாயமானதே.
நீங்க என்ன நினைக்கிறீங்க?

 ஒரு மனிதருக்கு என்னென்ன உரிமைகள் உண்டு?
 நமக்கு வீட்டிலும், சமூகத்திலும். நாட்டிலும் என்னென்ன கடமைகள் இருக்கின்றன?
 கடமைகளை எல்லாரும் ஒழுங்காக செய்தால் நமது வீடும் நாடும் எப்படியிருக்கும்?

No comments:

Post a Comment