Saturday, November 13, 2010

நான் யாராகப் போகிறேன்? (I want to Be...)

          'நீங்கள் யாராகப் போகிறீர்கள்?' என்ற கேள்வியை சிலர் நம்மிடம் கேட்டிருக்கலாம். வகுப்பில் ஆசிரியரோ, வீட்டில் நம பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ நம்மிடம் இந்தக் கேள்வியை கேட்கும்போது, 'நான் டாக்டராகப் போறேன்... இஞ்சினியராகப் போறேன்... கலெக்டராகப் போறேன்... டீச்சர் ஆகப்போறேன்' என்று விதவிதமாய் பதிலளித்திருப்போம். இதில் வேடிக்கை என்னவென்றால் அவ்வாறு பதிலளித்ததோடு சரி. அதன்பிறகு, நாம் என்ன சொன்னோம் என்பதே நம்மில் பலருக்கு நினைவிருப்பதில்லை. ஏதோ ஒருசிலர்தான் தாங்கள் சிறுவயதில் கொண்டிருந்த குறிக்கோளைப் பற்றி தீவிரமாக சிந்தித்து, அருமையாக திட்டம் தீட்டி, விடாமல் முயற்சி செய்து குறிக்கோளை அடைந்து விடுகிறார்கள்.
            
அமெரிக்காவில் செருப்புத்தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்த ஆபிரகாம் லிங்கனிடம் சிறுவயதிலேயே ஒரு குறிக்கோள் இருந்தது. அமெரிக்காவின் அதிபர் தங்கும் மாளிகையான வெள்ளைமாளிகையில் தானும் ஒருநாள் அதிபராக அமர்ந்து, மக்களுக்கு சேவை செய்வேன் என்பதே அவரது சிறுவயது குறிக்கோள். அவரைச் சுற்றி வாழ்ந்தவர்களுக்கு அவரின் இந்த குறிக்கோள் மிகவும் வேடிக்கையாகத் தோன்றியது. ஆனால், லிங்கன் தனது குறிக்கோளில் மிகவும் உறுதியாயிருந்தார். வீட்டின் மிகவும் ஏழ்மையான சூழலிலும், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் கடினப்பட்டுப் படித்து முன்னேறினார். தேர்தல்களில் போட்டியிட்டார். ஆனால் மக்கள் இவரை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இதனால் தொடர்ந்து படுதோல்வியடைந்தார். இருப்பினும், தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டுக்கொண்டேயிருந்தார். ஆம். அந்த நாள் வந்தது. தான் நினைத்ததுபோலவே அதிபராகி வெள்ளைமாளிகையில் போய் அமர்ந்தார். கறுப்பின மக்களுக்காக அளப்பரிய பணிகளை செய்து எல்லோருடைய மனதிலும் நீங்காத  இடத்தையும் பெற்றுவிட்டார்.
             
நீங்கள் யாராக விரும்புகிறீர்கள் என்று பிறர் நம்மிடம் கேட்டது ஒருபுறம் இருக்கட்டும். 'நான் யாராகப் போகிறேன்?' என்ற கேள்வியை நாம் என்றாவது நம்மிடம் கேட்டு;ப் பார்த்திருக்கின்றோமா? ஏதோ நாமும் பிறந்தோம்... ஜாலியாக இருந்தோம்... இறந்தோம் என்று வாழ்வை வீணடிக்கப்போகிறோமா?
        
சிலரிடம் குறிக்கோள்களுக்கு பஞ்சமே கிடையாது. ஆயிரம் குறிக்கோள்கள் அவர்களிடம் மலிந்து கிடக்கின்றன. ஆனால், அதனை அடைவதற்கான வேகம், விவேகம், கடின உழைப்பு, மனஉறுதி காணப்படுவதில்லை. அதனால்தான் லிங்கனைப்போல் நம்மால் குறிக்கோளை அடையமுடிவதில்லை.
நீங்க என்ன நினைக்கிறீங்க?

 'நான் யாராகப் போகிறேன்?' என்ற தெளிவு உங்களிடம் இருக்கிறதா? யாராகப் போகிறீர்கள்?
 அந்த இலக்கை அடைய என்னென்ன முயற்சிகளை இதுவரை மேற்கொண்டிருக்கிறீர்கள்?
 நமது எந்தவொரு இலக்கும் சமூக நலனுக்காகவே என்பது சரியா?

No comments:

Post a Comment