Saturday, November 13, 2010

கவனச் சிதறல் - கவனியுங்கள் (Distraction)

             
குரு ஒருவர் கோவிலில் போதித்துக் கொண்டிருந்தார். அவரது நீளமான, வெளிறிய தாடியை தடிவிக்கொண்டே, தலையை ஆட்டிஆட்டி பரவசத்தோடு போதித்துக் கொண்டிருந்தார். முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பாட்டியின் கண்ணிலிருந்து கண்ணீர் பொங்கி வழிந்தது. அந்த குருவானவரை உற்றுக் கவனித்தபடியே அந்த பாட்டி அழுது கொண்டிருந்தார். இதைப் பார்த்த குருவின் மனதில் பல எண்ணங்கள் ஊசலாடின. 'இந்த பாட்டி ஏன் அழுது கொண்டிருக்கிறார்? எனது போதனை அவரது மனதை ஆழமாக உருக்கிவிட்டதோ! கடவுளே நன்றி! இந்த பாட்டியின் உள்ளத்தை எனது போதனையால் நீர் கவர்ந்துவிட்டீர்' என்றவாறு பலவகையான எண்ணங்கள் அவருக்குள் உருண்டோட, தொடர்ந்து போதித்துக் கொண்டேயிருந்தார். போதனை முடிந்ததும் மக்கள் கூட்டம் கோயிலிலிருந்து கலையத் தொடங்கியது. குருவானவர் அவசர அவசரமாக, ஆவலோடு அந்த பாட்டியை தேடிச்சென்றார். 'பாட்டி ஏன் நீங்க அழுதுகிட்டே இருந்தீங்க' என்று கேட்டார். அதற்கு அந்த பாட்டி, 'சாமி... நீங்க உங்க நீளமான தாடியை தடவிக்கிட்டே தலையை ஆட்டிஆட்டி பேசும்போது இரண்டு நாளுக்கு முன்னால காணாமப்போன என் ஆடு நியாபகத்துக்கு வந்திருச்சு. நல்ல கொழுத்த ஆடு சாமி... அது தலையை ஆட்டியாட்டி நடந்து வரும்போது அப்படியொரு அழகு சாமி... உங்களைப் பார்த்ததும் அது நியாபகம் வந்திருச்சு. அதனாலதான் அழுக வந்திருச்சு' என்றார். 'அப்போ நான் போதிச்சதைக் கேட்டு நீங்க அழவில்லையா?' என்று குரு மனம் நொந்து போனார்.
        
 நாமும் பலநேரங்களில் இந்த பாட்டியைப் போலத்தான். உற்றுக்கவனிப்பதுபோல பாவனை செய்து கொண்டு வேறொரு சிந்தனை வானில் சிறகடித்துக் கொண்டிருப்போம். கண்கள் மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க மனம் எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கும். ஒரு மணி நேரத்திற்குள் அறையில் அமர்ந்துகொண்டே கற்பனை என்ற ராக்கெட்டில் உலகையே பலமுறை சுற்றி வந்துவிடுகிறோம். மனம் ஒரு குரங்கு என்பார்கள். அது ஒரு கிளையில் இருக்க விரும்பாமல் பல கிளைகளுக்கும் தாவிக் கொண்டேயிருக்கும்.
            
 இன்று... இங்கே... இப்போது... இந்த நிமிடம்... இந்த நொடி... இதை கவனி... முழுமையாக கவனி... என்று ஜென் எனப்படும் தியானம் வலியுறுத்துகிறது. நாம் பல நேரங்களில் கடந்தகால அனுபவங்களிலும் எதிர்கால கனவுகளிலும் மூழ்கிவிடுகிறோம். இன்றைய இளைய தலைமுறையினரிடம் கவனச்சிதறல் அதிகமாக இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பல்வேறு காரியங்களில் மனதைச் செலுத்தி ஒரு வேலையையும் உருப்படியாக செய்யமுடியாமல் பலர் தடுமாறுகின்றனர்.
நீங்க என்ன நினைக்கிறீங்க?

 கவனச் சிதறலுக்கான காரணங்கள் என்னென்ன?
 கவனச் சிதறலால் என்னென்ன விளைவுகளை சந்திக்கிறோம்?
 கவனச் சிதறலை தவிர்க்க முடியுமா? என்னென்ன வழிகளில்?

2 comments:

  1. wow edmond its sth... amazing n i certainly believe that only u can go beyond.. u r my inspiration keep up ur gd work may God strenthen u through all ur experiences

    ReplyDelete